பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி, கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

நடிகை ஜெயந்தி, தென்னிந்திய மொழிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றுள்ளார் . 1960 மற்றும் 70 களில் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியான நாயகியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இப்படி பல மொழிகளில் நடித்திருந்தாலும் கன்னட திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தினார். 7 முறை கன்னடா ஸ்டேட் அவார்ட் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் கன்னடத்தில் நம்பர் ஒன் கதாநாயகியாக ராஜ்குமார், உதயகுமார், கல்யாண் குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து அங்கே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே ஏற்படுத்தி இருந்தார். இவர் ராஜ்குமாருடன் ஜோடியாக 30 கன்னட படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 76 வயதாகும் ஜெயந்தி, ஆஸ்துமா பிரச்சனைக்காக பல சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்து விட்டதால் இவரது குடும்பத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து திரையுலகினர் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.



Comments are closed.

https://newstamil.in/