ஹீரோ படத்தின் கதை திருடப்பட்டது உண்மை – பாக்யராஜ்

இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் இயக்குநர் மித்ரன் தன் கதையை திருடி ‘ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

பாக்யராஜ் இந்த கதைக்கு சொந்தமான உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2017ஆம் ஆண்டில் அவர் பதிவு செய்த வைத்த கதையிலும், ஹீரோ படக்கதையிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை வரும் காட்சிகளில் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. ‘ஹீரோ’ படம் கடந்த வாரம் வெளியான நிலையில், கதை திருட்டு நடந்தது உண்மைதான் என்று இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

அதன்படி, நான் கதை சுருக்கத்தை மட்டும் தங்களிடம் கேட்டு வாங்கி கொண்டு, டைரக்டர் மித்ரனிடம் ‘ஹீரோ’ படத்தின் கதை சுருக்கத்தையும் எழுதி தர சொல்லி, அதை வாங்கி ஒப்பிட்டு பார்த்தோம். தங்கள் கதையும், டைரக்டர் மித்ரனின் ஹீரோ கதையும் ஒன்றுதான் என எல்லோரும் கருத்து வேறுபாடு இன்றி ஒரே முடிவாக கூறினார்கள். எனது கருத்தும் அதே என்பதால் மித்ரனை நான் எனது அலுவலகத்துக்கு வரவழைத்தேன்.

கதை, திரைக்கதைகளை ஒப்பிட்டு பார்ப்பதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழி காட்டுதலின்படி, இரண்டு கதைகளிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை இவ்வளவு ஒற்றுமைகள் இருப்பதாய் மொத்த உறுப்பினர்களும் கருதுகிறார்கள் என்ற விவரத்தை இயக்குநர் மித்ரனிடம் கூறினேன். ஆனால், அவர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பிட்டு பார்த்த 18 செயற்குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, அவர்களின் விளக்கத்தை கூற வேண்டும் என்று கேட்டார்.

ஹீரோ படத்தின் கதை தங்களுடைய கதை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டதால் இதற்கான இழப்பீட்டு தொகையை தர வேண்டும் என்று மித்திரன் இடம் கூறியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் பிரபலமான ஹீரோக்களின் படங்கள் கூட இந்த மாதிரி பிரச்சினையை சந்தித்து உள்ளது. நாங்கள் இது சம்பந்தமாக மித்ரனுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், அவர் ஒரு மாதம் ஆகியும் அதற்கான பதிலை அவர் அளிக்கவில்லை. மேலும், இயக்குனர் மித்ரன் அவர்கள் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்க கேவியட் வாங்கி உள்ளார்.

இதனை சங்கத்துக்கான பெரிய அவமதிப்பாக நினைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நமது சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிபடக் கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்து கூறுகிறோம்’. இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

‘ஹீரோ’ படத்தின் கதைத் திருட்டு விவகாரம் உறுதியானது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/