தனுஷ் மீது காதல்; விலகி போக காரணமே இதுதான் முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!
மும்பை: மிருணாள் தாகூர் தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக கவனம் பெறும் நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது சித்தாந்த் சதுர்வேதி ஜோடியாக நடித்துள்ள “தோ தீவானே ஷெஹர் மெய்ன்” திரைப்படம் பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புரொமோஷன் நிகழ்ச்சியின் போது, கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தனுஷ் – மிருணாள் தாகூர் காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் முதன்முறையாக மனம் திறந்து பேசினார்.
தனுஷுடன் தனக்கு காதல் உறவு இருப்பதாக கூறப்பட்ட தகவல்களை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என்னைப் பற்றியும் தனுஷை பற்றியும் பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தனுஷ் எனக்கு எப்போதும் ஒரு சகோதரர் போலத்தான். எங்களுக்குள் இருப்பது தொழில்முறை உறவுதான்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் பேசினார். “நீ ஒரு நடிகை, அதை என்னால் ஏற்க முடியாது என்று கூறி எனது முன்னாள் காதலர் என்னை பிரிந்துவிட்டார். அவர் மிகவும் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வளர்ப்பு காரணமாக என் வாழ்க்கை முறையை அவர் ஏற்க முடியாமல் போனதை நான் புரிந்துகொண்டேன். அந்த பிரிவு என் வாழ்க்கைக்கு நல்லதுதான்” என்று மிருணாள் தாகூர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, தனுஷின் சகோதரிகள் மற்றும் மிருணாள் தாகூர் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்தது, மேலும் இருவரும் ஒரே இடத்தில் இருந்ததாக கூறப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியது போன்ற காரணங்களால் காதல் கிசுகிசுக்கள் அதிகரித்தன. ஆனால், இருவரும் இதுகுறித்து இதுவரை மௌனம் காத்து வந்தனர்.
தொடர்ந்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது மிருணாள் தாகூர் அளித்த இந்த விளக்கம், தனுஷ் – மிருணாள் தாகூர் காதல் கிசுகிசுகளுக்கு முடிவை கொண்டு வந்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
