ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுப்பு: மக்களவையில் அமளி, 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
புது டெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடப்புத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) நடைபெற்ற இந்த சம்பவம், நாடாளுமன்ற அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டிய சில நிமிடங்களிலேயே இந்த இடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில், முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேச ராகுல் காந்தி முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அவையில் காகிதங்களை வீசியது, முழக்கமிட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த இடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாலை 3 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, சபாநாயகர் பொறுப்பில் இருந்த பாஜக எம்.பி. திலீப் சைகியா, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் பெயர்களை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரதமர் கடும் அழுத்தத்தில் இருப்பதாகவும், முக்கிய விஷயங்களை மறைப்பதற்காகவே தன்னை அவையில் பேச அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வர்த்தக ஒப்பந்தங்கள், விவசாயிகள் நலன், நிதி தொடர்பான விவகாரங்கள் குறித்து பிரதமர் சமரசம் செய்துள்ளதாகவும், இந்திய மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்த சம்பவம், மக்களவையில் எதிர்க்கட்சி – ஆளும் கட்சி இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
