எஸ்.ஐ வில்சன் கொலை – 2 பயங்கரவாதிகள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ., வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு முகாமிட்டிருந்த தமிழக கியூ பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து தமிழகம் கொண்டு வர உள்ளனர்.

களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்கை பிடிக்க போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று உடுப்பி மாவட்டத்தில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரை போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 8ஆம் தேதி இரவு, பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், இரண்டு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்களும் இருந்தன. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. தமிழ்நாடு, கேரள மாநிலங்களை உலுக்கிய இந்த வழக்கில், திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவிலை அடுத்த இடாலகுடி தவ்ஃபீக் ஆகிய இருவரும் தேடப்பட்டு வந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், வில்சன் கொலையை அரங்கேற்றியவர்களுக்கு, மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கி கொடுத்த இஜாஸ் என்பவன் பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் எனக் கூறப்படும் அப்துல் சமீமும், தவ்ஃபீக்கும், கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து, இன்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயங்கவராதிகள் இருவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இருவரும் கேரளா சென்று மடிச்சூரில் இருந்து உடுப்பி வந்துள்ளனர். பின்னர் மங்களூரு வழியாக நேபாளம் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.



Comments are closed.

https://newstamil.in/