ஆபாசப் பேச்சு – சரவணா ஸ்டோர் மேலாளர் குருநாதன் மீது வழக்கு – நடந்தது என்ன?

தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதால் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு சீல்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31 ஆம் தேதி வரை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து நேற்று மதியம் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று வணிக வளாகத்தை மூடச் சொல்லியுள்ளனர். அதன் பேரில் கடையை மூடிய சரவணா ஸ்டோர் ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள் சென்றபின் சரவணா ஸ்டோரை, பொருள்கள் விற்பனைக்காக திறந்து வைத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் வந்த போது சரி சரியென சொல்லி விட்டு அவர்கள் சென்ற பிறகு விற்பனையை நடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்து மாநகராட்சி மண்டல அதிகாரி, காவலதுறையினருடன் சென்று புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு 7 மணியளவில் சீல் வைத்தனர்.

அப்போது சரவணா ஸ்டோர் கடையின் மேலாளரான குருநாதன் என்பவர் மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலம் 58 வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சரவணா ஸ்டோர் செயலாளரான குருநாதன் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், முறையற்று தடுத்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/