திமுக பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை நடத்தும் பேரணிக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக நாளை பேரணி நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இதற்குஎதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ளார். பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் பேரணிக்கு அனுமதி தரக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன், மற்றும் பிடி ஆஷா ஆகியோர் அமர்வு திமுகவின் பேரணிக்கு எதிரான வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜரானார் திமுக தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில். திமுக கடந்த டிச. 18ம் தேதி தான் 23ம் தேதி நடைபெற உள் பேரணிக்கு அனுமதி கோரியது.

டிசம்பர் 19ம் தேதி சென்னை போலீசார், ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது வன்முறை ஏதேனும் நடந்தால் பொறுப்பேற்க தயாரா என கேட்டனர். உருவபொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு செய்ய மாட்டோம் என திமுக உத்திரவாதம் தரவில்லை என வாதிடப்பட்டது. மனுதாக்கல் செய்த பிறகு திமுக பேரணிக்கு அனுமதி மறுப்பா அல்லது அதற்கு முன்பா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் திமுக பேரணிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேரணி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/