உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறி எனக்கு தென்பட்டது. அதை தொடர்ந்து நான் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது என் உடல்நிலை சீராக உள்ளது, இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர் தயவு செய்து உங்களை சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்“ என்றுள்ளார்.

அமித்ஷா வருகிற 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அமித்ஷா அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ., மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்ரமணியசுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,’கொரோனா தொற்று பாதிப்பால் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென ஊடகங்களில் வரும் செய்தியை கேட்டு வருத்தமடைகிறேன். அவர் விரைவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆக பிரார்த்தனை செய்கிறேன் ‘என பதிவிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/