கேரள பேருந்து பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு: சமூக ஊடக வீடியோவுக்குப் பின் தீபக் தற்கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை உத்தரவு
கேரளாவில் ஒரு தனியார் பேருந்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஒன்று, 41 வயதான தீபக் என்ற நபரின் உயிரிழப்புக்கு காரணமாக மாறியுள்ளது. இந்த சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக், தனியார் ஆடை நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தவர். கடந்த ஜனவரி 16-ஆம் தேதி, தனது பணிநிமித்தமாக கண்ணனூர் அருகேயுள்ள பையனூரிலிருந்து மட்டனூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், பேருந்தின் நடுப்பகுதியில் நின்றபடியே அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது, தீபக்கின் அருகில் நின்றிருந்த ஷிஞ்சிதா முஸ்தபா என்ற பெண், தன்னை ஒரு ஆண் பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக சமூக ஊடகங்களில் வீடியோவுடன் பதிவிட்டார். அந்த வீடியோ ஒரே நாளில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றதுடன், தீபக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் இணையத்தில் பரவின.
இந்தச் சூழ்நிலையில், ஜனவரி 18-ஆம் தேதி காலை, தீபக் தனது வீட்டிலுள்ள அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் தன் மீது பரவிய குற்றச்சாட்டுகள் மற்றும் அவமானம் காரணமாகவே தங்கள் மகன் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், தீபக்கின் தாயார் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில், ஷிஞ்சிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் கருத்துப் போராக மாறியுள்ளது. ஒரு தரப்பு, சமூக ஊடகங்களில் முன் விசாரணை இல்லாமல் ஒருவரின் பெயரை களங்கப்படுத்தியதே இந்த துயர முடிவுக்குக் காரணம் என கூறுகிறது. மற்றொரு தரப்பு, பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்த உண்மைகளை பேச வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்துகிறது.
இந்தச் சம்பவத்தில் மனித உரிமை மீறல் ஏற்பட்டிருக்கலாம் என கருதிய கேரள மாநில மனித உரிமை ஆணையம், வழக்கை வடக்கு மண்டல டிஐஜி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும், பிப்ரவரி 19-ஆம் தேதி கோழிக்கோட்டில் நடைபெறும் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தீபக்கின் நண்பர்கள் மற்றும் பணியிட சக ஊழியர்கள், அவர் மீது இதற்கு முன் எந்தவிதமான புகாரும் இல்லை என்றும், கடமையுணர்வுடன் பணியாற்றியவர் என்றும் தெரிவித்துள்ளனர். திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த தீபக், பெற்றோர்மீது அளவற்ற பாசம் கொண்டவர் என்றும் அவரது நண்பர்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், தீபக்கின் தாயார் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில், ஷிஞ்சிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த பெண்ணை காவல்துறை கைது செய்து, விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வெளியிடும் முன் அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
