வெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் – வீடியோ

உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார்.

பின்னர் உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நான்கு பேர் கொண்ட கும்பல் அப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளதாகவும், குற்றத்தில் ஈடுபட்டவர்களைச் சொல்லி விடக்கூடாது என்பதற்காக, அப்பெண்ணின் நாக்கை அறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அலிகார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண், உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்துவிட்டதாகவும், கைகள் பாதியளவு முடங்கியுள்ளதாகவும், நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகிய நிலையில் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்த போதும், அந்த பெண்ணின் தந்தை, தாய் போன்றவர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சினர். தயவுசெய்து இந்து முறைப்படி, தகனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். ஆனால் இதற்கு காவல்துறை சம்மதிக்கவில்லை. இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஊருக்கு வெளியே அந்த இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது.

பெண்ணின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் முன்பாக, அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் நின்று, தங்கள் வீட்டுக்கு உடலை கொண்டு செல்லுங்கள் என கதறியுள்ளனர். ஆனால் போலீஸ் இதற்கு சம்மதிக்காமல் பெற்றோரை இறுதி சடங்கிற்கு அனுமதிக்காமல் ஊருக்கு வெளியே கொண்டு சென்று உடலை எரித்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தார் கெஞ்சி கதறிய போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஹத்ராஸ் எனும் இந்த இளம்பெண் கொலை வழக்கின் குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் எனக்கோரி சமூவலைத்தளங்களில் மக்கள் தங்கள் ஆதங்களை #JusticeForManishaValmiki #hangtherapist #RIPManishaValmiki உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளில் பதிவிட்டு வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/