KGF-ல் என்ட்ரி – இயக்குனருடன் இணையும் நடிகர் அஜித்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான பான் இந்தியா திரைப்படம் “கேஜிஎப்”. இந்த படம் வெளியானதும் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் கோடிக்கணக்கில் வசூல் செய்த இந்த படத்தை ரசிகர்கள் பரவலாக கொண்டாடினர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிப்பில் “கேஜிஎப் 2” வெளியானது. இந்த முறையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. பிரம்மாண்டமான படைப்பு, அதிரடி ஆக்ஷன், உச்சகட்ட மாஸ் காட்சிகளால் “கேஜிஎப்” இரண்டு பாகங்களும் அசுர வெற்றி பெற்றன.

இதையடுத்து, “கேஜிஎப் 3” எப்போது வெளியாவது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது, இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருவதாக படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் கூறியுள்ளார். இந்த நிலையில், “கேஜிஎப் 3” படத்தில் நடிகர் அஜித் குமார் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள தகவலின்படி, இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் இரண்டு படங்களில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் முதல் படம், அஜித்தின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் என கூறப்படுகிறது.

மேலும், அஜித் நடிக்கவுள்ள இரண்டாவது படத்தில் “கேஜிஎப் 3” பாகத்திற்கான விஷயங்கள் உள்ளடக்கியதாகவும், அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி “கேஜிஎப் 3” படத்திற்கான தொடக்கத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் “கேஜிஎப்” யூனிவெர்ஸில் அஜித் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



https://newstamil.in/