எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக அரசு! ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் பதவி நியமனம் ரத்து!
முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நியமனத்தை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, அவரின் நெருக்கமான ஜோதிடராக கூறப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசியல் பொறுப்பு வழங்கப்பட்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது. முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
இந்த நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. அரசு நிர்வாகத்தில் ஜோதிடருக்கு அதிகாரப்பூர்வ பொறுப்பு வழங்குவது சரியான முன்னுதாரணம் அல்ல என்று பலரும் விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து, ரிக்கி ராதன் பண்டிட்டின் நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. குறிப்பாக, இன்று சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சில கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அதிகரித்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தவெக அரசு பின்னடைந்து, ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரி பதவியை ரத்து செய்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பாக விஜய் திருச்செந்தூர் மற்றும் சாய்பாபா கோயில்களுக்கு சென்று வழிபட்டதும், அதற்குப் பின்னால் ரிக்கி ராதன் பண்டிட்டின் ஆலோசனை இருந்ததாக அப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
