அன்புமணி மீது ராமதாஸ் புகார்! கட்சியை அபகரிக்க போலி ஆவணங்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) தந்தை மகன் அரசியல் மோதல் தினந்தோறும் தீவிரமாகி வருகிறது. கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே பல மாதங்களாக பனிப்போர் தொடரும் நிலையில், தற்போது இது பெரியளவு வெடித்துள்ளது. இருவரும் “பாமக எங்களுடையது” என உரிமை கோரி, தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் அன்புமணியை அதிகாரப்பூர்வ பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்திருந்தாலும், ராமதாஸ் தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாம்பலம் சின்னம் செம்மையாக எங்களுடையதே என்றும், அன்புமணி தரப்பின் அனைத்துப் பதிவுகளும் போலி என்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்காக டெல்லி நீதிமன்றத்தில் முன்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாமக உட்பகை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தலைவராக அங்கீகாரம் பெற்றதாக குற்றஞ்சாட்டி, பாமக கௌரவ தலைவராக உள்ள ஜி.கே.மணி டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில்,

  • “அன்புமணி போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்,”
  • “அந்த ஆவணங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி நீட்டிக்கப்பட்டதாக EC கூறியது,”
  • “போலி ஆவணங்களை பயன்படுத்தி தலைவர் பதவி பெற்றிருப்பதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்,”
    என்று ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம், ராமதாஸ் விழுப்புரம் தைலாபுரத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, “பாமக உரிமை தொடர்பான வழக்கு குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், பாமக உட்பகை அரசியல் சூழல் மீண்டும் தீவிரமடைந்து, தந்தை–மகன் போரின் அடுத்த கட்டத்துக்குள் மாறியுள்ளது.



https://newstamil.in/