வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு; 20 பேர் பலி: 500 குடும்பங்கள் சிக்கியுள்ளதால் அச்சம்

வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் இருந்து மீட்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மானந்தவாடி ஆகிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளவர்களை மீட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன. வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8086010833 / 9656938689 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மானந்தவாடி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தேவைப்படும் சிகிச்சையளிக்க அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக செவிலியர்களும் மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



https://newstamil.in/