விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) முக்கிய தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மும்பையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அஜித் பவார், புனேவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க பாராமதி நோக்கி பயணம் செய்துள்ளார். அந்த நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை அவரது அலுவலகம் அல்லது மாநில அரசு சார்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
அஜித் பவார் – அரசியல் பயணம்
அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். நீண்ட காலமாக சரத் பவாரின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்து வந்த அவர், பின்னாளில் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அரசியல் பாதையில் முக்கிய திருப்பத்தை சந்தித்தார்.
சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில், அஜித் பவார் பாஜக ஆதரவுடன் கட்சியிலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்படத் தொடங்கினார். அதன் மூலம், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்றார்.
1982ஆம் ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினராக அரசியலில் அடியெடுத்து வைத்த அஜித் பவார், அதன் பின்னர் தொடர்ந்து 8 முறை பாராமதி சட்டமன்றத் தொகுதியிலிருந்து MLA ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல துறைகளில் அமைச்சராகவும், மொத்தம் 6 முறை துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு 10வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், நான்கு மாதங்களில் அந்த பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.
