பெரியார் யார் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகிற்கே தெரியும், துக்ளக் விழாவில் துக்ளக் இதழ் குறித்து ரஜினி பேசியிருந்திருக்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பற்றி இப்போது பேசி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் பற்றி பேசியதை ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
திருவள்ளூரில் பழமைவாய்ந்த வீரராகவ பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி பேசியதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்கலாம். பெரியார் யார் என்று தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும். அவர் சரித்திரமாய் இருந்து சகாப்தம் படைத்தவர். நாம் என்ன செய்யப் போகிறோம் என்று இன்றைய அரசியல் சூழலில் இருப்பதைப் பற்றி பேசவேண்டும்.
பெரியார் பெண்ணுரிமைக்காக போராடியவர், அவரை பற்றி துக்ளக் விழாவில் பேசியது தவறு. துக்ளக் இதழ் பற்றி ரஜினிகாந்த் பேசி இருந்திருக்கலாம். ரஜினிகாந்த் இதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் வெறும் அம்பு தான் என்றும் யாரோ அவரை பின்னணியிலிருந்து இயக்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.