ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை!

சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கஸ்டடியில் எடுத்த 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்திற்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில், ரௌடி திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியதை அடுத்து அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.



https://newstamil.in/