மண்டாடி திரைப்பட விமர்சனம்: சூரியின் மிரட்டல் நடிப்பு, பிரம்மிக்க வைக்கும் படகுப்போட்டி! | Mandadi Review
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படம், வழக்கமான மீனவ வாழ்வியல் கதைகளில் இருந்து சற்று விலகி, ராமநாதபுரம் பகுதி மீனவர்களின் பாரம்பரிய படகுப்போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
முக்கடல் சூழ்ந்த தமிழகத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள முகவைப்பட்டினம் என்ற ஊரில் கதை நடக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே படகுப்போட்டியில் புறக்கணிக்கப்பட்ட முகவை மைந்தன்ஸ் அணியின் கேப்டன் மாரி (மிதுன்), எதிரணியான சுனாமி ரைடர்ஸ் அணியின் கேப்டனை கொல்ல முயற்சிக்கிறார். இதனால் ஊருக்குள் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
சுனாமி ரைடர்ஸ் அணியின் கேப்டனின் தந்தையான சாட்டைப் புலி (சுஹாஸ்), மாரியை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து தப்பிக்கும் மாரி, சென்னையில் வசிக்கும் தனது ஊர்க்காரரான முத்துக்காளியிடம் (சூரி) அடைக்கலம் தேடுகிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு வெளியேறிய முத்துக்காளி, மாரியுடன் மீண்டும் முகவைப்பட்டினத்திற்கு திரும்புகிறார். அங்கு வந்த பிறகுதான், ஊரில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைகளுக்கும் படகுப்போட்டிக்கும் இடையே இருக்கும் தொடர்பை அவர் அறிந்துகொள்கிறார்.
ஒருகாலத்தில் சிறந்த படகுப்போட்டி வீரராக இருந்த முத்துக்காளி, மாரி சார்ந்திருக்கும் முகவை மைந்தன்ஸ் அணியை போட்டிக்குத் தயார்படுத்தத் தொடங்குகிறார்.

சூரி ஏன் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறினார்? சூரிக்கும் சுஹாஸுக்கும் இடையே ஏற்பட்ட பகை என்ன? முகவை மைந்தன்ஸ் அணி மீண்டும் படகுப்போட்டியில் வெற்றி பெற்றதா? என்பதற்கான பதில்கள்தான் படத்தின் மீதிக்கதை.
வழக்கமான மீனவக் கதையில் இருந்து மாறுபடும் ‘மண்டாடி’
தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையைப் படமாக்கும்போது, கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது, கடலில் ஏற்படும் பிரச்னைகள், காதல் என ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கதைகள் நகர்வதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால், ‘மண்டாடி’ அந்த வழக்கமான பாதையில் பயணிக்கவில்லை.
மீன்பிடித் தொழிலை மட்டும் மையமாக்காமல், கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப் படகுப்போட்டியை மையமாக வைத்து முழுநீள திரைப்படமாக உருவாக்கியிருப்பது இப்படத்தின் முக்கியமான சிறப்பு.
இது வெறும் படகை ஓட்டும் போட்டி அல்ல என்பதையும் படம் அழுத்தமாகச் சொல்கிறது. காற்றின் திசையை அறிதல், நீரின் போக்கை புரிந்துகொள்ளுதல், இயற்கையின் மாற்றங்களை துல்லியமாக உணர்தல் என கடலோடிகளின் அனுபவத்தையும் அறிவையும் படத்தின் வழியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
ஆரம்பத்தில் மெதுவாக… பின்னர் சூடுபிடிக்கும் திரைக்கதை
படத்தின் ஆரம்பக் காட்சிகள் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், சூரி ஊருக்குள் வந்த பிறகு திரைக்கதை வேகம் பெறுகிறது.
சூரி – சுஹாஸ் இடையே இருக்கும் பழைய பகை என்ன என்ற கேள்வி காட்சிக்கு காட்சி ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.
இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் சத்யராஜின் கதாபாத்திரம் என்ன? அவருடன் இருந்த சூரியும் சுஹாஸும் எப்படி எதிரிகளாக மாறினார்கள்? என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகள் ரசிக்கும்படி இருந்தாலும், பிளாஷ்பேக் மற்றும் கூடுதல் காட்சிகளின் காரணமாக கிளைமேக்ஸில் வர வேண்டிய படகுப்போட்டியின் மீதான அழுத்தம் சற்று குறைகிறது.
திரைக்கதையில் சில கேள்விகள்
படத்தின் முக்கியமான குறையாக இருப்பது திரைக்கதையின் சில இடங்களில் காணப்படும் நம்பகத்தன்மையின்மை.
குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் சில சம்பவங்களுக்குப் பிறகு 20 ஆண்டுகளாக ஊரைவிட்டு சென்ற நாயகன் திடீரென மீண்டும் ஊருக்குள் வருவது போதிய அளவு இயல்பாக உருவாக்கப்படவில்லை.
அதேபோல், சூரி ஏன் ஊரை விட்டு வெளியேறினார் என்பதற்கான பின்னணியிலும் இன்னும் வலுவான காரணம் இருந்திருக்கலாம்.
இரு நண்பர்கள் பகையாளிகளாக மாறுவது தமிழ் சினிமாவில் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்ட கதை என்பதால், சில காட்சிகள் பார்த்தவுடன் வேறு திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன.
வசனங்களிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘பந்தயம் என்பது அறிவு’ போன்ற கவனிக்க வைக்கும் வசனங்கள் இருந்தாலும், ராமநாதபுரத்தை மையமாகக் கொண்ட கதை என்ற உணர்வை முழுமையாக ஏற்படுத்தும் அளவுக்கு வட்டார மொழி வசனங்கள் அதிகம் இல்லை. சில இடங்களில் வழக்கமான நட்பு, காதல், துரோகம் சார்ந்த வசனங்களே இடம்பெறுகின்றன.
சூரி – நடிப்பில் இன்னொரு படி மேலே!
முத்துக்காளி கதாபாத்திரத்தில் சூரி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
குறிப்பாக படகுப்போட்டி காட்சிகளுக்காக அவர் செலுத்தியிருக்கும் உடல் உழைப்பு திரையில் தெளிவாகத் தெரிகிறது. கடலுக்குள் படமாக்கப்பட்ட காட்சிகளில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், ஒரு அனுபவம் வாய்ந்த மீனவரைப் போலவே சூரி காட்சியளிக்கிறார்.
காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் மட்டுமின்றி உணர்ச்சிகரமான தருணங்களிலும் சூரியின் நடிப்பில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.
ஒரு நட்சத்திர ஹீரோவாக சூரிக்கு இருக்கும் திறனை ‘மண்டாடி’ மீண்டும் நிரூபிக்கிறது.
சுஹாஸின் தமிழ் அறிமுகம் கவனம் பெறுகிறது
தெலுங்கில் பிரபலமான நடிகரான சுஹாஸ், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
சூரிக்கு இணையான முக்கிய கதாபாத்திரம் என்பதால், அவருக்கான காட்சிகளும் வலுவாக எழுதப்பட்டுள்ளன. சுனாமி ரைடர்ஸ் அணியை வழிநடத்தும் பயிற்சியாளராகவும், ஊரில் செல்வாக்கு கொண்ட முக்கிய நபராகவும் சுஹாஸ் நடித்துள்ளார்.
பிளாஷ்பேக் காட்சிகளிலும் தற்போதைய காட்சிகளிலும் தனது நடிப்பில் வித்தியாசத்தைக் காட்டியிருப்பது சிறப்பு.
அவருக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கனமான டப்பிங் குரல் சில காட்சிகளில் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்தாலும், சில இடங்களில் கதாபாத்திரத்துடன் சிறிய விலகலை ஏற்படுத்துகிறது.
சத்யராஜ் வரும் காட்சியில் விசில்!
சத்யராஜ் அறிமுகமாகும் காட்சியே ரசிகர்களிடம் விசில் வாங்கும் வகையில் அமைந்துள்ளது.
அவரது கதாபாத்திரம் படத்தில் முக்கியமானதாக எழுதப்பட்டுள்ளது. கடலின் மீதான மரியாதை, கடலை நம்பி வாழும் மனிதர்களின் மனநிலை போன்றவற்றை அவர் பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன.
அவரது அனுபவமும் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மகிமா நம்பியாரும் தனது கதாபாத்திரத்தை உணர்வுப்பூர்வமாக கையாண்டுள்ளார். குறிப்பாக சூரியை திட்டிக்கொண்டே அழும் காட்சியில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் – படகுப்போட்டி காட்சிகள்!
‘மண்டாடி’ திரைப்படம் அதிகம் பேசப்படப்போகும் விஷயம் அதன் படகுப்போட்டி காட்சிகள்தான்.
கடலுக்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவுக்கு எதார்த்தமாக இருக்கின்றன.
படகுகளை மேலிருந்து கழுகுப்பார்வையில் காட்டுவது, படகில் இருக்கும் வீரர்களின் உடல்மொழியை பல்வேறு கோணங்களில் பதிவு செய்வது, கடலின் அலைகளையும் காற்றின் வேகத்தையும் காட்சிகளுக்குள் கொண்டு வருவது என ஒளிப்பதிவு அபாரமாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மற்றும் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பாக பாராட்டப்பட வேண்டியது.
இடைவேளைக்கு முன் வரும் படகுப்போட்டியும், கிளைமேக்ஸில் இடம்பெறும் போட்டியும் படத்தின் மிகச்சிறந்த காட்சிகளாக இருக்கின்றன.
சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னின் பங்களிப்பும் காட்சிகளின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கிறது.
தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு
ஜி.வி. பிரகாஷின் இசை, எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, பிரதீப் ஈ ராகவின் படத்தொகுப்பு, பீட்டர் ஹெய்னின் சண்டைப்பயிற்சி என தொழில்நுட்பக் குழு சிறப்பான உழைப்பை வழங்கியுள்ளது.
குறிப்பாக கடலில் படகுகளை படமாக்கிய விதத்திற்காக ஒளிப்பதிவாளருக்கும், அந்த காட்சிகளை சரியான வேகத்தில் தொகுத்த எடிட்டருக்கும் தனிப்பட்ட பாராட்டு கொடுக்கலாம்.
இறுதியாக…
ராமநாதபுரம் மீனவர்களின் பாரம்பரிய பாய்மரப் படகுப்போட்டி, காலப்போக்கில் ஃபைபர் படகுப்போட்டியாக மாறியதால் மரப்படகு தொழிலில் ஏற்பட்ட மாற்றங்கள், அதன் பின்னணியில் இருக்கும் வணிக நோக்கங்கள் என பல விஷயங்களை ஒரே கதைக்குள் கொண்டு வர முயன்றிருக்கிறது ‘மண்டாடி’.
திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள் என சில குறைகள் இருந்தாலும், அவற்றை மறக்கடிக்கும் அளவுக்கு கடலில் படமாக்கப்பட்டுள்ள படகுப்போட்டி காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
குறிப்பாக தமிழ் சினிமாவில் கடலையும், கடலில் படகுகளை இயக்கும் வீரர்களின் வாழ்க்கையையும் இவ்வளவு எதார்த்தமாக பதிவு செய்த திரைப்படங்கள் மிகக் குறைவு. அந்த வகையில் ‘மண்டாடி’ ஒரு முன்னோடி முயற்சியாக கவனம் பெறுகிறது.
குறைபாடுகள் இருந்தாலும், நாம் அதிகம் அறிந்திராத ஒரு கடலோர வாழ்வியலையும் பாரம்பரிய விளையாட்டையும் திரையில் காட்டியிருப்பதற்காக ‘மண்டாடி’ கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம்.
மண்டாடி – கடலுக்குள் ஒரு புதிய சினிமா அனுபவம்!
