இந்தியாவின் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலில்: பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்களுக்கு பெரும் நன்மைகள்!
இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களில் பல ஆண்டுகளாக இருந்த சிக்கல்களை நீக்கி, தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. சம்பளம், பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல நலன்கள் இனி எளிமையான விதிகளுடன் கிடைக்க உள்ளன. மேலும் வேலைக்குச் சேர்பவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கட்டாயமாகி உள்ளது. பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
29 பழைய சட்டங்களுக்கு பதிலாக 4 புதிய சட்டத் தொகைகள்
நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் இருக்கும் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 முக்கிய சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன:
- தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019
- தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020
- சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020
- தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020
இந்த சட்டங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மட்டுமின்றி, ஆன்லைன் தளங்களில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய நன்மைகள் மற்றும் மாற்றங்கள்
- ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்குவது கட்டாயம்
- ஓவர்டைம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டை சம்பளம்
- அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை ஒப்பந்தம் / அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கட்டாயம்
- அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, காப்பீடு உள்ளிட்ட நலன்கள்
- பாதுகாப்பான பணியிட சூழல் மற்றும் நவீன விதிகள்
- நிறுவனங்களுக்கு சட்ட விதிகளை எளிதாக பின்பற்ற உதவும் முறைகள்
பிரதமரின் கருத்து
பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய சட்டங்களை “சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மிகப் பெரிய மற்றும் முற்போக்கான சீர்திருத்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும்,
- தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டங்கள்
- பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் முடிவுகள்
என்று தெரிவித்துள்ளார்.
எதற்காக இந்த மாற்றம்?
சுதந்திரத்திற்கு முன்பும் அடுத்த சில ஆண்டுகளிலும் உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் இன்றைய சூழலில் சிக்கலாக இருந்தன. பல்வேறு தனிப்பட்ட சட்டங்களாக இருந்ததால் அவற்றை நடைமுறையில் பின்பற்ற இடர்பாடுகள் இருந்தன.
அதை சரிசெய்யவும், தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும், பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் நலன்களை உயர்த்தவும் தற்போதைய காலத்துக்கு ஏற்ப 4 புதிய சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
