Saturday, September 12, 2026
ENTERTAINMENT

டொரண்டோ திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய ‘டோரதி’! எழுந்து நின்று பாராட்டிய ரசிகர்கள்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா 2026-ல் திரையிடப்பட்டு, அங்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, 1980-களில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நட்பு மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அழுத்தமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, இளையராஜாவின் இசையும் பாடல் வரிகளும் இன்றைய தலைமுறையினரிடமும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

எழுந்து நின்று பாராட்டிய பார்வையாளர்கள்

‘டோரதி’ திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதையொட்டி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படத்தின் முன்னணி நடிகர்களான ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றிருந்தனர்.

திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், படம் நிறைவடைந்ததும் எழுந்து நின்று கைதட்டி படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளனர். பார்வையாளர்களின் இந்த அன்பான வரவேற்பு படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதனால், திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ‘டோரதி’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்றுள்ளது.

‘டோரதி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.